நவுறு தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்தில் குடியமர்த்துவது குறித்து நவுறுவுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாதென நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Michael Woodhouse அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களில் அகதிகளாக இனங்காணப்பட்டவர்களை ஆண்டுக்கு 150 பேர் என்ற அடிப்படையில் உள்வாங்கத் தயார் என்ற அறிவிப்பை தாம் ஆஸ்திரேலியாவிடமே தெரிவித்திருந்ததாக அமைச்சர் Michael Woodhouse சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே புகலிடக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்திற்குள் உள்வாங்கும் திட்டத்தில் நவுறுவுடன் புதிய ஒரு ஒப்பந்தத்திற்குள் செல்வதைத் தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நவுறு தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை நியூசிலாந்தில் குடியமர்த்துவதா இல்லையா என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விடயம் என ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்த கருத்துக்கான பதிலாகவே குடிவரவு அமைச்சர் Michael Woodhouse இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை புகலிடக்கோரிக்கையாளர்களை உள்வாங்கும் விடயத்தில் நியூசிலாந்து அரசுக்கு ஆஸ்திரேலியா இன்னமும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
