அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள Donald Trump அவர்கள் பல சர்ச்சைக்குரிய தீர்மானங்களில் கையெழுத்திட்டுவரும் பின்னணியில், ஆஸ்திரேலியாவுடனான அகதிகள் உடன்பாட்டிற்கு என்ன ஆகும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட எவரும் அமெரிக்காவில் புகலிடம் கோர முடியாதவாறு பல மாத தடை விதிப்பதற்கான முக்கிய தீர்மானத்தில், Trump இவ்வாரம் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகளை, அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான உடன்படிக்கை முன்னாள் அதிபர் Barack Obama-வுடன் எட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய அதிபராக Donald Trump பொறுப்பேற்ற வேகத்திலேயே பல கடும்போக்குடன் கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி வந்தாலும், ஆஸ்திரேலியாவுடனான உடன்படிக்கையை அவர் நிராகரிக்க மாட்டார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.
குறித்த உடன்படிக்கை இரு தரப்பினரது கவனத்திற்குரிய ஒன்றாகவே இருப்பதாகவும், Obama நிர்வாகத்தின் கீழ் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் Turnbull தெரிவித்தார்.
