ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தாம் தனி நாடாவதாக கேட்டலோனியாவின் பிராந்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை தாம் கலைப்பதாகவும், சுதந்திரப் பிரகடனம் செல்லாது என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். மேலும் கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாகவும் கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய தேர்தல் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா தன்னாட்சி பிரதேசம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர். அவர்களில் 90% கேட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்று கேட்டலன் அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பே செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது. மட்டுமல்ல, போலீசாரைக் கொண்டு இந்த வாக்கெடுப்பையும் ஸ்பெயின் அரசு குழப்பியது.
கேட்டலோனியா பிராந்தியத் தலைநகர் பார்சிலோனாவில் பிராந்திய நாடாளுமன்றம் உள்ளது. தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன. இவை அனைத்தும் இன்று முதல் தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.
கேட்டலோனியா தனி நாடானால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள பிற தனி நாடு கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கேட்டலோனியா நாட்டை தாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்றும் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருப்பதால் உலகின் பிற நாடுகள் உலகில் புதிதாய் பிறந்திருக்கும் கேட்டலோனியா எனும் நாட்டை அங்கீகரிப்பது கடினமே என்று பார்க்கப்படுகிறது. கேட்டலோனியா பிரகடனம் செய்திருக்கும் சுதந்திரம் அந்த நாட்டை உலகு அங்கீகரிக்கும் முழுமையான சுதந்திர நாடாக மாற்றுமா அல்லது வரும் நாட்களில் கேட்டலோனியா பிராந்தியம் கடுமையான வன்முறைகளை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
