நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஈரானிய பெண் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட அதேநேரம் காவல்துறையினராலும் தாக்கப்பட்டதாகவும் இவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அங்கு இருந்தால் தான் இறந்து போகக்கூடுமென SBSக்கு வழங்கிய பிரத்தியேக வீடியோ வழி நேர்காணல் ஊடாக இப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் இப்பெண் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான பல ஆதாரங்களும் SBSக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் இவர் தற்கொலை செய்யக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக தன்னிடம் கூறியதாகவும் இவர் மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பதாகவும் அவரது சட்டத்தரணி George Newhouse கூறினார்.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தை அணுகியபோது இந்த விடயம் தமக்கு ஏற்கனவே தெரியும் என்றும் இது பற்றி நவுறு காவல்துறையினர் ஆராய்வதாகவும் கடிதம் மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது.
