மேற்கு ஆஸ்திரேலியாவில் கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கைப்பின்னணி கொண்ட சிங்கள மருத்துவர் சாமரி லியனகே, தான் வெளியில் வந்தபின்னர், தன்னை நாடு கடத்த வேண்டாம் என குடிவரவு அமைச்சர் Peter Duttonஇடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவர் சாமரி லியனகே சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்த கணவனை, கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் Geraldtonஇல் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக்கொன்றிருந்தார்.
சாமரி லியனகேயின் கணவர் டினேந்திரா அத்துகோரளையும் ஒரு மருத்துவர் ஆவார்.
இதேவேளை குடும்பவன்முறைக்குள்ளானவர் என்பதால் இக்கொலைக்கான குறைந்தபட்ச தண்டனையாக, 4 வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாமரி லியனகே, பரோலில் வெளியே வருவதற்கான மனு, அடுத்த வருட ஆரம்பத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஆனால் சாமரி லியனகேயின் விசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், அவர் வெளியே வந்ததும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.
எனினும் தனது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, தன்னை நாடு கடத்த வேண்டாம் என குடிவரவு அமைச்சர் Peter Duttonஇடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமரி லியனகேயின் விசாவை மீண்டும் வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மீளாய்வு நடைபெற்றுவருவதால் இவ்விடயம் குறித்து தற்போது கருத்துக்கூற முடியாதென அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
Share
