இந்தியப்பின்னணியிலிருந்து வந்த குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளைவிட சிறந்து விளங்குகிறார்கள்!
இந்தியப் பின்னணி, பிலிபைன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளைவிட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதாவது Organisation for Economic Co-operation and Development (OECD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்துவந்த குழந்தைகள், ஆஸ்திரேலியாவில் பிறந்த சக குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக விளங்குகின்றன.
"The Resilience of Students with an Immigrant Background" அறிக்கையின்படி, 72 நாடுகளிலுள்ள மாணவர்களின் எழுத்தறிவு, எண் கணிதம் மற்றும் அறிவியல் செயல்திறன் ஆகியவற்றை, ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா ஏழாவது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் முதலாமிடத்திலுள்ளது. சீனாவின் Macao மற்றும் Hong Kong ஆகியன முறையே 2ம், 3ம் இடங்களிலுள்ளன.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகவோ அல்லது ஆங்கிலத்தைப் பேசுகின்ற குழந்தைகளைவிட பிறமொழிபேசும் குழந்தைகள் ஆங்கில மொழியில் (spelling) சிறந்து விளங்குவதாக கடந்த வருட NAPLAN National Report தெரிவித்துள்ளது.
குழந்தைகள் எந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வருகிறார்கள், எந்தநாட்டில் குடியேறுகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் கல்வியறிவு, சமூக மற்றும் உணர்ச்சி ரீதியிலான நெகிழ்திறன் ஆகியன
அநேகம் தங்கியிருப்பதாக அல்லது அதற்குரிய வாய்ப்பு இருப்பதாக OECD அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறிவருவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று தமது குழந்தைகளுக்கான நல்ல கல்வி முறையாகும்.

