நியூசிலாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Christchurch நகரில் நேற்று இரண்டு மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை 49 ஆகும்.
இவர்களில் Linwood மசூதியில் இல் வைத்து 41 பெரும் Masjid Al Noor மசூதியில் வைத்து ஏழு பேரும், Christchurch மருத்துவமனையில் வைத்து ஒருவரும் என்று 49 பேர் பலியானார்கள். மேலும் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தைகளும் அடங்குவர். சிகிச்சை பெறுவோரில் 11 பேர் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து வயது பெண் குழந்தையும் அடங்கும். இந்த குழந்தையையும் அவரின் தந்தையையும் கொலையாளி வெளியில் துரத்திச்சென்று பிறரின் முன்னிலையில் இருவரையும் சுட்டுகொன்றான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் இழந்தவர்கள் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, ஜோர்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா நாட்டைச் சார்ந்தவர்கள் என்றுகூறப்படுகிறது.
பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த மூவர் உயிர் இழந்திருப்பதை அந்த நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்தியாவைச் சார்ந்த ஒன்பது பேரைக் காணவில்லை என்று கூறப்படுவதால் இவர்களில் பலரும் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அடக்கம் செய்யும் நோக்கில் இறந்தவர்களின் சடலங்களை உடனடி கையளிக்கும் பணி நடந்துவருவதாக நியூசிலாந்து போலீசார் கூறுகின்றனர்.
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியா நாட்டின் NSW மாநிலத்தின் Grafton நகரைச் சார்ந்த 28 வயதான Brenton Tarrant கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். Brenton Tarrant பாகிஸ்தான், வட கொரியா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்றும், உடற்பயிற்சி நிலையத்தில் பிறருக்கு உடற்பயிற்சி வழங்கும் தொழில் செய்துவந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தாக்குதல் நடப்பதான செய்தி கிடைத்த 36 நிமிடங்களில் சந்தேகிக்கப்படும் கொலையாளியை தாம் கைது செய்ததாக நியூசிலாந்து போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் துணிச்சலை பெரிதும் பாராட்டிய நியூசிலாந்து நாட்டின் பிரதமர் Jacinda Arden, போலீசாரின் வீரச்செயல் முறையாக கௌரவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
துக்கத்தில் மூழ்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டுக்கு தமது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு 8.30 மணிக்கு சிட்னி Opera House யின் மீது - நியூசிலாந்து நாட்டின் சின்னமான silver fern ஒளியில் பொறிக்கப்படும் என்று NSW Premier Gladys Berejiklian அறிவித்துள்ளார்.
