பப்புவா நியூகினியின் மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில், அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அந்நாட்டு குடிவரவுத்துறை தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனுஸ் தடுப்பு முகாமிலிருந்த, நேபாளைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை, நாடு கடத்துவதற்காக Port Moresby-க்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளதாகவும், மற்றொரு நேபாள நாட்டவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்படும்போது தப்பித்து ஓடியுள்ளதாகவும் அங்குள்ள சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட சுமார் 163 ஆண்கள் மனுஸ் தடுப்பு முகாமில் உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவர் என பப்புவா நியூகினி குடிவரவுத்துறை முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் செயற்பாட்டில் பல சிக்கல்கள் காணப்பட்டதாகவும், அவை தீர்க்கப்படும்வரை,இவர்களை நாடு கடத்தக்கூடாது எனவும் அங்குள்ள அகதிகள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆஸ்திரேலிய அரசு உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென கிரீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.