பல மில்லியன் செலவில் நடந்த முன்னாள் சிட்னி Auburn துணை மேயர் சலீம் மெகஜரின் காதல் திருமணம் உலகையே ஆஸ்திரேலியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த திருமணம் அதுவென ஊடகங்களும் வர்ணித்தன.
பெரும் பணக்காரரான சலீம்-ஆயிஷா திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருந்த நிலையில் சலீமும் மற்றொரு பெண்ணும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகியதையடுத்து ஆயிஷா அவரை விட்டுப் பிரிந்து சென்றதாக செய்திகள் வெளியாகின.

எனினும் இதை மறுத்த சலீம் ஆயிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது முகப்புத்தகத்தில் காதல் வாசகங்களுடன் தொடர்ந்தும் பதிவேற்றி வந்தார்.

இந்த நிலையில் தனது கணவனுக்கெதிராக ஆயிஷா apprehended violence order தாக்கல் செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Apprehended violence orderஎன்பது மற்றொரு நபரால் துன்புறுத்தலுக்குள்ளாகும் ஒருவர் அவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நீதிமன்றின் ஆணையைப் பெறுவதாகும். இவ்வாறு நீதிமன்றால் வழங்கப்படும் ஆணையை மீறி சம்பந்தப்பட்ட நபரை அவர் அணுகினால் குறித்த நபர் கைது செய்யப்படுவார்.
இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சலீம்,இவ்வாறு செய்யுமாறு தனது மனைவியை காவல்துறையினரே நிர்ப்பந்தித்ததாகவும் தனது மனைவி அப்படிச் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் தன்னையும் ஆயிஷாவையும் மரணம் மட்டுமே பிரிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் செலவிலான திருமணம் மட்டுமல்லாமல் அரசியல், பண விவகாரம் என்று பல விடயங்கள் காரணமாக சலீம் ஊடகங்களின் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
