ஃபெடரல் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. 45வது நாடாளுமன்றத்திற்காக நடைபெறும் இத்தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான 150 பேரும் செனற் சபைக்கான 76 பேரும் முக்கியமாக நாட்டின் புதிய பிரதமரும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இவர்கள் எல்லோரும் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள்? ஆஸ்திரேலியாவின் அரசியல் முறைமை எப்படி இயங்குகின்றது?

நாட்டின் அரசியல் அதிகாரங்கள் ஃபெடரல் அரசுக்கும் 6 மாநிலங்களுக்கும் அரசியலமைப்பின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நாட்டின் அரசியலில் மாநில அரசுக்களை விட முக்கிய பங்கினை வகிப்பது ஃபெடரல் அரசாகும்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டங்கள் எதுவாகவிருந்தாலும் இரு சபைகளினதும் ஒப்புதலைப் பெறவேண்டும். அதன் பின்னர் Governor General அதில் கையெழுத்திட வேண்டும்.
மேல்சபை என அழைக்கப்படும் செனற் சபைக்கு 6 மாநிலம் மற்றும் 2 territory களிலிருந்து மொத்தம் 76 பேர் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
இவர்களது முக்கிய பணி அரசு கொண்டுவரும் சட்ட முன்வடிவுகளை மீளாய்வு செய்வதாகும்.

கீழ்ச்சபை என அழைக்கப்படும் மக்கள் பிரிதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நாடு முழுவதும் உள்ள தொகுதிக்கு ஒருவர் என்ற வகையில் 150 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த 150 ஆசனங்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவர் பிரதமராக தெரிவுசெய்யப்படுவார்.

தற்போதைய பிரதமர் Malcolm Turnbull தலைமையிலான லிபரல் கூட்டணி அரசு 90 ஆசனங்களுடன் காணப்படுகின்ற அதேநேரம் லேபர் கட்சி 55 ஆசனங்களை வைத்திருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்கு 76 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதுமுள்ள 62 Marginal ஆசனங்களே அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதை தீர்மானிக்கவுள்ளன.
Marginal ஆசனங்கள் என்பது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மக்கள் ஆதரவு ஓரளவுக்கு சமனான அளவில் காணப்படும் தொகுதிகளாகும்.
தேர்லின் பின்னர் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும்.
அவ்வாறான தொங்கு நாடாளுமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலையடுத்து ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து கிரீன்ஸ் கட்சியின் Adam Bandt மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய ஆதரவுடன் ஆடசியமைப்பதற்குத் தேவையான 76 ஆசனங்களைப் பெற்ற லேபர் கட்சி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் 4 பேரில் ஒருவர் புலம்பெயர் பின்னணியைக் கொண்டவர். அத்துடன் நாட்டின் அரைவாசி சனத்தொகையினரை பார்த்தால் அவர்களது தாய் அல்லது தந்தை வெளிநாட்டில் பிறந்திருப்பார்.
ஆனால் இந்த பல்கலாச்சாரத் தன்மை ஆஸ்திரேலிய அரசியலில் அவ்வளவாக பிரதிபலிப்பதில்லை என விமர்சிக்கப்படுவதுண்டு.
இதேவேளை எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 15.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளனர்.
அன்றையதினம் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை நாடு முழுவதுமுள்ள 8000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
http://www.australia.gov.au/about-government/how-government-works,
http://www.aec.gov.au/About_AEC/Translated_information/index.htm
http://www.aec.gov.au/faqs/voting_australia.htm ஆகிய இணையத்தளங்களுக்குச் செல்லுங்கள்
