விக்டோரியாவின் Dandenong பகுதியில் வாழ்ந்து வந்த திருநாவுக்கரசு திருவருள்குமார்(36) என்ற புகலிடக்கோரிக்கையாளர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் கடந்த 5 வருடங்களாக மெல்பேர்ணிலேயே வாழ்ந்து வந்தார்.
கடந்த ஞாயிறு இரவு தூக்கத்திற்குச் சென்ற திருவருள்குமார் அடுத்த நாள் காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுகளின் பின்னரேயே தெரியவருமெனவும் குறிப்பிடப்படுகின்றது.
நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காத நிலையில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் Forklift ஓட்டுநராக பணிபுரிந்த திருவருள்குமார் அனைவரோடும் நட்போடு பழகும் ஒருவர் என்பதுடன் கடின உழைப்பாளி எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை திருவருள்குமாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவியையும் இரு பெண் குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
