COVID 19 தொற்று நோய்க்கு தடுப்புமருந்தை அறிமுகம் செய்வதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. இது உலகில் கொவிட் 19 இற்கு பயன்பாட்டுக்கு வந்துள்ள முதலாவது தடுப்பு மருந்தாக்கும். ஆனால் ரஷ்யாவின் இந்த அறிவித்தல், reckless பொறுப்பற்ற செயல் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளும் தொற்றுநோய்த்துறை நிபுணர்களும் விமர்சித்திருக்கிறார்கள். இது நியாயமான விமர்சனம்தானா? விளக்குகிறார் AstraZeneca எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
முழு உலகமும் COVID 19 இற்கான தடுப்புமருந்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
சர்வதேசரீதியாக இதுவரை 210 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ஏழரை லட்சம்பேர் இந்த நோய்காரணமாக மாண்டிருக்கிறார்கள். அமெரிக்கா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா , தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் இந்த நோய் கட்டுக்குள் அடங்காமல் பரவிவருகிறது. COVID 19 இற்கான தடுப்பு மருந்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ‘COVID 19 இற்காக நாம் கண்டுபிடித்துள்ள தடுப்புமருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கிவிட்டோம்’ என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது. பொதுசன ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாக இருந்தாலும், விஞ்ஞான, வைத்திய மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் மத்தியில் இந்தச்செய்தி பெரும் வரவேற்பையோ பரபரப்பையோ ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இரண்டு மிகப்பிரதானமான நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும். இதை safety and efficacy என்று குறிப்பிடுவார்கள். ஒன்று: அது மனிதர்க்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பாதுகாப்பானது என்பது நிரூபிக்கப்படவேண்டும். இரண்டு: அது பயனுள்ளது அதாவது நோய் தொற்றைத்தடுக்கிறது என்பது நிரூபிக்கப்படவேண்டும். ரஷ்யாவைப் பொறுத்த அளவில் இவையிரண்டையும் உறுதிப்படுத்த போதுமான ஆய்வுகளை அது செய்யவில்லை என்பதே முன்வைக்கப்படும் விமர்சனங்களாகும்.
பிரதானமாக phase 3 clinical trials என்ற சற்று பெரும் எண்ணிக்கையான மனிதர்களைக்கொண்ட குழுக்கள் மத்தியில் இந்த தடுப்பு மருந்து பரீட்சித்துப்பார்க்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால்தான் ரஷ்யா இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதாக அறிவித்தலைச் செய்திருப்பது ‘பொறுப்பற்ற செயல்’ என்று ஆஸ்திரேலிய நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அதேபோல, அமெரிக்காவில் பிரபல தொற்று நோயியல் நிபுணர் Anthony Fauci இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் தடுப்புமருந்து, மக்களின் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கிறது என்பது குறித்து தான் பலத்த சந்தேகம் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நிரூபிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் போதுமான பரிசோதனைகளை செய்யவில்லை என்றே தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Corona virus ஏற்படுத்தும் COVID 19 தொற்றுபற்றி சுமார் 10 மாதங்களுக்கு முன்தான் தகவல்கள் வந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்புமருந்து ஒருமுறை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவருக்கு இரண்டு வருடங்களுக்கு நோய்பாதுகாப்பு கிடைக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் அளிப்பதாக பல நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரிட்டனில் Nottingham பல்கலைக்கழகத்தில் molecular virology துறையில் பணியாற்றும் பேராசிரியர் Jonathan Ball கருத்து தெரிவிக்கும் போது, phase 3 என்ற clinical trials நடத்தாமல் தடுப்புமருந்தின் பாதுகாப்பு பற்றி சொல்வதற்கில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
University college London இல் computational systems biology துறையில் பணியாற்றும் பேராசிரியர் Francois Balloux கருத்து தெரிவிக்கும்போது ரஷ்யாவின் இந்த அறிவித்தல் பொறுப்பற்ற செயல்மட்டுமல்ல, முட்டாள்தனமான செயலுமாகும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது பாதுகாப்பானது மற்றும் பனுள்ளது என்பதை நிரூபிக்க ரஷ்யா என்னென்ன ஆய்வுகளைச் செய்திருக்கவேண்டும்?
1950 மற்றும் 60 களில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே coldwar என்ற பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலம். யார் முதலில் மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவது என்பது தேசிய மற்றும் கௌரவப் பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. அப்போது ரஷ்யா முதன்முதலில் விண்ணுக்கு ஏவிய செய்மதிக்கு Sputnik எனபது பெயர். இப்போதும் தான் கண்டுபிடித்திருக்கும் தடுப்புமருந்துக்கும் விநோதமாக அது Sputnik5 என்றே பெயர் வைத்திருக்கிறது. ஆகவே அதே அணுகுமுறையில, முந்திக்கொள்வது யார் என்பதே பிரதான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறதே ஒழிய ஆராய்ச்சியில் எல்லா படிநிலைகளும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை இரண்டாம்பட்சமாக ரஷ்யா கருதுவதாகவே பல நிபுணர்களும் சொல்கிறார்கள்.

சில நோய்களுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு வர பத்து வருடங்கள்கூட எடுத்ததுண்டு. ஆனால் covid 19 தொற்றின் உக்கிரம், பரவும் வேகம், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இறப்போரின் எண்ணிக்கை என்பவற்றைக் கருத்தில்கொண்டு பல படிநிலைகளைச் சீக்கிரமாகக் கடந்து, தடுப்பு மருந்தை மக்களுக்கு விநியோகிக்க எல்லா மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பது நிச்சயிக்கப்படுவது ஆகிய விடயங்களில் எந்த சமரசமும் compromise செய்யமுடியாது என்பதே ஏகோபித்த நிலைப்பாடாகும். தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக பல வருடங்கள் தேவைப்படுவதில்லை என்றபோதும், தடுப்பு மருந்து முக்கியமான 4 பிரதான படிநிலைகளைக் phasesகளைக் கடக்கவேண்டும்.
- Pre clinical trial: இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்புமருந்து விலங்குகள் மீது பரிசீலிக்கப்பட்டு antibodies என்ற நோயெதிர்ப்புத் திறன் விலங்குகளின் உடலில் ஏற்படுகிறதா, இதன் காரணமாக நோய் குணமாகிறதா என்பதை உறுதிசெய்தல்.
- மனிதர்களைக்கொண்ட சிறுகுழுவில் இந்த மருந்தை அவர்களது உடலில் செலுத்தி, இது பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்தல்.
- இதுதான் பிரதான படிநிலையாகப் பார்க்கப்படுவது. மனிதர்களைக் கொண்ட பல்வேறு குழுக்களில் இந்த மருந்து எதிர்பார்த்த பலனைத் தருகிறதா என்பதைப் பரிசோதித்தல். இதற்கு பல காலம் எடுக்கும். இதைத்தான் ரஷ்யா சரிவர செய்யவில்லை என்று பரவலாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறது.
- மருந்து பயன்பாட்டுக்கு வந்தபின்பு adverse effects என்ற மோசமான விளவுகளை இது யாருக்காவது ஏற்படுத்துகிறதா என்பதை கவனமாக அவதானிப்பதும். அப்படி ஏற்பட்டால் தடுப்புமருந்தின் விநியோகத்தை நிறுத்துவதும்.

எந்த ஒரு தடுப்பு மருந்தும் நூற்றுக்கு நூறு சதவீதமாகப் பாதுகாப்பானது அல்ல. பிரதானமாக immunocompromised என்ற, வேறு நோய்கள் காரணமாக ஏற்கனவே உடல் நலிவுற்றவர்கள் இந்த தடுப்புமருந்துகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்படக் கூடும். ஆகவே மனிதர்களைக்கொண்ட பெரிய குழுக்களில் இது பரிசோதிக்கப்படவேண்டும் என்றும் மனிதருள் பல பிரிவினருக்குமிடையே இது பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.ரஷ்யாவில் Gamelaya research institute இல் covid 19 இற்கான இந்த Sputnik 5 தடுப்புமருந்து phase 1 மற்றும் 2 என்பவற்றின்போது சுமார் 200இற்கும் குறைவான மனிதர்கள் மீது மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.ஆகவே ரஷ்யா போதுமான ஆய்வுகள் இன்றி அவசர அவசரமாக இந்த தடுப்பு மருந்தை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதைத்தவிர 150 இற்கும் மேற்பட்ட தடுப்புமருந்துகள் சர்வதேச ரீதியாக ஆய்வில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றுள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடிய தடுப்பு மருந்து ஏதும் உள்ளதா?
ஆம். லண்டனில் Oxford பல்கலைக்கழகம் பிரபல pharmaceutical நிறுவனமான AstraZeneca வின் அனுசரனையுடன் ஆய்வு செய்துவரும் தடுப்புமருந்தும், சீனாவில், Cansino biological என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தும், அமெரிக்காவில் Moderna நிறுவனம் ஆய்வுசெய்துவரும் தடுப்புமருந்தும் phase 3 என்ற படிநிலைக்குள் நுழைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே இவற்றுள் ஒன்று அடுத்த வருட நடுப்பகுதியில் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்றே நம்பப்படுகின்றது.





