பிரியா-நடேஸ் குடும்பத்தினர் சமூக தடுப்பிலிருந்து(community detention) விடுவிக்கப்பட்டு Biloela சென்று வாழ முடியும் என புதிய லேபர் அரசு அண்மையில் அனுமதியளித்திருந்த பின்னணியில் தற்போது இக்குடும்பம் பெர்த்திலிருந்து புறப்பட்டுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்தது.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதியளித்ததற்கிணங்க, இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் கோரியிருந்த பின்னணியில், லேபர் அரசு அண்மையில் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இதற்கேற்ப பிரியா -நடேஸ் குடும்பத்தினருக்கு bridging விசாவும் வழங்கப்பட்டுள்ளது.
பிரியா குடும்பத்தை மீண்டும் Biloela-வுக்கு கொண்டு வருவதையிட்டு தான் மிகவும் பெருமைப்படுவதாக பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பெர்த்தில் சமூகத்தடுப்பில் வாழ்ந்துவந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் Biloela செல்வதற்காக இன்று புதன்கிழமை பெர்த்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

Kopika and Tharnicaa, the daughters of Priya and Nades Nadesalingam. Source: AAP / Richard Wainright
விமானநிலையத்தில் வைத்து கருத்துத் தெரிவித்த பிரியா Biloela-வில் மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடங்குவதில் நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனவும், பெர்த்தில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் - பெர்த் மக்களை மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜுன் 12ம் இரண்டாவது மகள் தருணிகாவின் பிறந்ததினத்தை Biloela-வில் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம் Biloela சென்றடைந்த பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இக்குடும்பத்தினர் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க Biloela திரும்பும் இக்குடும்பத்தினருக்கு உதவும்வகையில் Gofund ஊடாக நடத்தப்பட்ட நிதி சேகரிப்பில் சுமார் இரண்டு லட்சம் லொடர்களுக்கு மேல் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிரியா-நடேஸ் குடும்பம் கடந்துவந்த பாதை கீழே தரப்பட்டுள்ளது.
பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.
நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

The Murugappan couple Priya and Nadesalingam with their Australian-born children Kopika and Tharunicaa. Source: Supplied
இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

Supporters of the Tamil asylum seeker family hold placards in support outside the Australian Federal Court on September 04, 2019 in Melbourne, Australia. Source: Getty Images AsiaPac
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
தருணிகா மருத்துவசிகிச்சைக்காக கிறிஸ்மஸ் தீவிலிருந்து பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டதையடுத்து முழுக்குடும்பமும் பெர்த்தில் தற்காலிகமாக சமூகத்தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தருணிகா குழந்தை என்பதால் பெற்றோரை அவரிடமிருந்து பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.