தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலேசியாவுக்கு வந்து போவது குறித்து தமக்கு தெரியும் என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதில் அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அவர் மலேசியாவில் தடைசெய்யப்படுவார் என்றும் மலேசியாவின் Bukit Aman பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் Datuk Ayob Khan தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருபவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ள தகவல்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மலேசியாவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 12 பேரும் தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறார்கள் என்றும் வெகுவிரைவில் அவர்கள் தங்களது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பிலுள்ள 12 பேரது வங்கிக்கணக்குகளிலும் பெருந்தொகையான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும் அந்தப்பணம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக பயன்படுத்தப்பட்டதும் தங்களது கைதுக்கான காரணங்களில் ஒன்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கடந்த வருடம் மலேசியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தினத்தை முன்னின்று ஒழுங்குசெய்தவர்கள் என்றும் மேலும் இருவர் சமூகவலைத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவான தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் Datuk Ayob Khan தெரிவித்தார்.
