மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த மாத ஆரம்பத்தில் 12 வயது சிறுமியொருத்தி குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஆஸ்திரேலிய சுகாதார வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பதினொரு வயதில் கர்ப்பிணியாகி 12 வயதில் குழந்தை பெற்றிருக்கும் இந்த சிறுமி பெர்த் நகர வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் தாயானவர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
சமூக நல அமைச்சு, பெர்த் பொலீஸ் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை இணைந்து இந்த சிறுமியின் நலன் குறித்த நடவடிக்கைகளை கவனித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தின் ஊடாகத்தான் கர்ப்பிணியாக்கப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட்டு, அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் இந்த விடயம் கொண்டுசெல்லப்படும் என்று சிறுமியின் நலன் பேணும் அமைப்புக்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரைக்கும் 12 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பன்னிரண்டு பெண்களின் விவரம் தங்களது கோப்புக்களில் பதியப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது குழந்தையை பெற்றுள்ள சிறுமிதான் வயதால் மிகக்குறைந்தவர் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு 13 வயதுக்கும் குறைந்த மூன்று சிறுமிகள் குழந்தையை பெற்றிருக்கிறார்கள் என்றும் 14 வயது சிறுமிகள் ஏழு பேர் குழந்தை பெற்றிருக்கிறார்கள் என்றும் 15 வயது சிறுமிகள் 21 பேர் தாயாகியுள்ளார்கள் என்றும் அந்தக்குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது.
