ஆஸ்திரேலியாவின் 2019-20ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளநிலையில் இதனால் அதிகம் பாதிக்கப்படவுள்ளவர்கள் யார் என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
அகதிகள்
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறிய அகதிகள், Jobactive உள்ளிட்ட வேலையற்றோருக்கான சேவைகளைப் பெறுவதற்கு 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் இக்காலப்பகுதி 6 மாதங்களாக காணப்பட்டது. புதிதாக வரும் அகதிகள் குறித்த 12 மாத காலப்பகுதியில் நாட்டில் குடியேறுவதிலும் ஆங்கிலத்தைக் கற்பதிலும் அதிக கவனம் செலுத்தலாம் என குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் அரசு நான்கு ஆண்டுகளில் 77 மில்லியன் டொலர்களை சேமிக்கலாம் என கருதுகின்றது.
புதிய குடியேறிகள்
ஆஸ்திரேலியாவுக்குள் ஆண்டுதோறும் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 190000 இடங்களிலிருந்து 160000 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
Welfare கொடுப்பனவு பெறுவோர்
நலன்புரி கொடுப்பனவு பெறுவோரின் தொழில்வருமானம் குறித்த தரவுகள் மற்றும் அறிக்கையிடல் data-matching தானியங்கி இயந்திரங்கள் மூலம் கணக்கிடப்படவுள்ளது. இதன்மூலம் 2.1 பில்லியன் டொலர்களை சேமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள்
ரோயல் கமிஷன் விசாரணையைத் தொடர்ந்து வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியுள்ள அரசு தொடர்ந்தும் அவற்றைக் கண்காணிப்பதற்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
NDIS திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய காப்புறுதித் திட்டத்தை முழுவதுமாக செயற்படுத்துவதில் காணப்படும் தாமதநிலையையடுத்து, இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியில், பயன்படுத்தப்படாத 1.6 பில்லியன் நிதி, வேறு திட்டங்களில் செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மருத்துவர்கள்
ஆஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதென ஆஸ்திரேலிய அரசு முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைக்கப்பட்டிருந்தநிலையில், இவ்வாண்டு இது மேலும் 155 இடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 300 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
