சிட்னி நகர கடைகளின் வர்த்தக நேரத்தை 24 மணிநேரமாக நீடிப்பது தொடர்பாக சிட்னி நகர கவுன்ஸில் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் அதிகரித்துள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த யோசனை குறித்து பரிசீலிக்கவுள்ளதாக சிட்னி நகர மேயர் Clover Moore தெரிவித்துள்ளார்.
இரவு நேர வாழ்க்கையை சிட்னியில் அறிமுகம் செய்யும் விதமாகவும் அதேவேளை வணிக வாய்ப்புக்களை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார பயன்களை விஸ்தரிப்பதற்காகவும் இரவு வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஆரோக்கியமானது என்று சிட்னி மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையின் பிரகாரம், சிட்னி நகரத்திலுள்ள வர்த்த நிறுவனங்கள் மூடப்படும் நேரங்களுக்கேற்ற வர்த்தக வலையங்களை உருவாக்குவதற்கும் அதன் பிரகாரம் வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும் கவுன்ஸில் ஆலோசித்துவருவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி இந்த திட்டம் குறித்து கவுன்ஸில் பரிசீலிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் சிட்னி high street பகுதியிலுள்ள கடைகள் பின்னிரவு 2 மணி வரையான இரவு நேர வர்த்தகத்துக்கும் Barangaroo, Green Square ஆகிய பகுதி கடைகள் 24 மணிநேர வர்த்தகத்துக்கும் அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
