புலம்பெயர் வியட்நாமிய அரசியல் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியட்நாமிலிருந்து கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த வியட்நாமை பூர்வீகமாக கொண்ட முதியவர் சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளார்.
சிட்னியில் வெதுப்பகம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 70 வயது முதியவரான Chau Van Kham 1983 ஆம் ஆண்டு வியட்நாம் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தவர்.
கடந்த ஜனவரி மாதம் வியட்நாமுக்கு சென்றிருந்தபோது அவர் வியட்நாமிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.
Chau Van Kham ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், வியட்நாம் அரசுக்கு எதிரான புலம்பெயர் அரசியல் கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டார் என்றும் தற்போது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போலி கடவுச்சீட்டுடன் நாடு திரும்பியிருந்தார் என்றும் வியட்நாம் தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள Chau Van Kham மீது தற்போது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இவர் ஆஸ்திரேலிய பிரஜையாக உள்ளபோதும் - இவரது விடுதலை தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சபை கோரிக்கை விடுத்துள்ளபோதும் - ஆஸ்திரேலியா தரப்பில் மௌனம் சாதிக்கப்படுகிறது.
பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறுகையில் - வெளிநாடுகளுக்கு போகும்போது ஆஸ்திரேலிய பிரஜைகள் அந்தந்த நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்கும்படி தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். மீறுவோர் அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
