தன்னைவிடவும் 38 வயது அதிகமுள்ள பெண்ணைத் திருமணம் செய்த பல்வீந்தர் சிங் என்ற இந்தியப் பின்னணி கொண்ட இளைஞருக்கு, 4 வருட போராட்டத்தின் பின்னர் நியூசிலாந்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-இல் மாணவர் விசாவில் நியூசிலாந்து சென்ற 24 வயதான பல்வீந்தர் சிங், சிகையலங்கார நிலையமொன்றில் சந்தித்த 61 வயதான Kessell என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் 38 வயது வித்தியாசத்தில் இடம்பெற்ற இத்திருமணத்தின் உண்மைத்தன்மையில் சந்தேகம் இருப்பதாகவும், இது நிலையான உறவாக இருக்குமா என்பதில் உறுதியில்லாததாலும், partnership பிரிவின் கீழ், பல்வீந்தர் சிங்கிற்கான வேலை விசாவை வழங்க நியூசிலாந்து குடிவரவு திணைக்களம் மறுத்துவிட்டது.
எனினும் தனது திருமணம் விசாவுக்காக நடைபெற்ற ஒன்று அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, பல்வீந்தர் சிங் தொடர்ந்தும் முயற்சித்துவந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து அண்மையில் அவருக்கு அந்நாட்டிற்கான நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை Kessell-க்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் 39 வயது மகன் ஒருவர் உள்ள பின்னணியில், தனது மகனை விடவும் வயது குறைந்த கணவனுடனான வாழ்க்கை பற்றிக் கேட்டதற்கு, தான் மனதால் இன்னமும் 21 வயதுப்பெண்ணாகவே இருப்பதாகவும், வயதுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லையெனவும் கூறியுள்ளார்.
