உலகெங்குமுள்ள 5 கோடி பேஸ்புக் பாவனையாளர்களின் கணக்குகள் இணைய மோசடிக்காரர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான 'view as' எனும் வசதி ஊடாக இணையத்திருடர்கள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பேஸ்புக் பக்கத்தை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை பார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த 'view as' ஆகும்.
இவ்வாறு 5 கோடி பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளமை சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உனடியாக இப்பிரச்சினையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஊடுருவப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 9 கோடி பேஸ்புக் பாவனையாளர்களினதும் கணக்குகள், கடவுச் சொல் கொடுக்காமல் தானாகவே 'login' ஆகாதவகையில் logout செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தமது கைபேசி மற்றும் கணணிகளில் பேஸ்புக் கணக்குகளுக்குச் செல்லும்போது மீண்டும் கடவுச் சொல்லைக் கொடுத்தே 'login' செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
