1924-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக, 1936-ல் கோயில் நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில் இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவை கேரள இடதுசாரி அரசாங்கம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். ஆனால் அவர்கள் எவருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு, கேரள அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி அங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு இடமளிக்குமென நம்புகிறோம்.
