முகநூல் மீது கடந்த செப்ரெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இணையத்தாக்குதலின் மூலம் உலகெங்குமுள்ள 29 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் களவுபோயுள்ளதாக கூறியுள்ள முகநூல் நிர்வாகம் ஆஸ்திரேலிய பயனாளர்களில் 62 ஆயிரத்து 306 பேரின் பெரும்பாலான தகவல்கள் இணையத்திருடர்களினால் களவாடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்த தகவல்களில் முகநூல் பயனாளர்களின் தொலைபேசி இலக்கம், நடமாட்டங்கள், முகநூலில் தேடிய விவரங்கள், சொந்தஇடம் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை அடங்கும் என்றும் முகநூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்படி இணையத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மொத்த ஆஸ்திரேலிய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 813 பேர் என்று சரியான கணக்கு விவரங்கள் கூறுகின்றபோதும் மீதிப்பேர் மிகக்குறைந்த அளவிலான தாக்குதலுக்கே உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் பயனாளர்கள் இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டதாக தாங்கள் ஆரம்பத்தில் எண்ணியதாகவும் ஆனால், உடனடியாக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் பாரதூரமாக நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டதாகவும் முகநூல் நிர்வாகம் கூறியுள்ளது.
