கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட 132 சிறுவர்களுடன் சேர்த்து இதுவரை சுமார் 700 அகதிகள் நவுறு தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்று சுயாதீன அகதிகள் நல அமைப்பொன்று ஆஸ்திரேலியாவின் செய்திச்சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
நவுறு தீவுகளிலுள்ள சிறுவர்களை மையமாகக்கொண்டு ஆஸ்திரேலிய அரசின் மீது பல்வேறு தரப்பு அழுத்தங்களும் பெருகிவருவதால் பிரதமர் Scott Morrison இரகசியமாக அதேவேளை துரிதமாக இந்தப்பிரச்சினைக்கு முடிவை எட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலத்தில் தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதற்கும் அதேவேளை நாடு இவ்வளவு காலமும் முகம் கொடுத்துவந்த சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தனது பதவிக்காலத்தில் மேற்கொள்வதன் மூலம் தனது ஆளுமையை நிரூபிப்பதற்கும் பிரதமர் Scott Morrison முனைப்புடன் செயலாற்றிவருவதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் நோக்கர்கள் -
அந்த வரிசையில் நீண்ட காலம் கிடப்பிலுள்ள மனிதாபிமான விவகாரமான நவுறு அகதிகள் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கு Morrison உறுதிபூண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் செப்ரெம்பர் மாதம் முதல் நவுறுவில் இயங்கிவரும் அகதிகள் முகாம் பராமரிப்புக்கும் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் இதுவரையும் ஆஸ்திரேலிய அரசு 385.6 மில்லியன் டொலர் நிதியை செலவிட்டிருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் 79 வீதமானவர்கள் அகதிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று 2016 இல் அரசினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் பெரும்பாலனவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அடுத்தபடியான அங்குள்ளவர்கள் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
