ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீதும் கூட்டணி துருப்புகளின்மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் 'பன்னிரண்டுக்கும் மேற்பட்ட' ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படும் நிலையில் இத்தாக்குதலில் எத்தனைப் பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று மரணமடைந்ததையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறி வரும் நிலையில் இத்தகைய தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் ஈரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ என்பதுடன் அந்நாட்டின் இரண்டாவது அதிகாரமிக்க நபராகவும் அவர் விளங்கினார்.
இதேவேளை ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள பின்னணியில் இரு நாடுகளும் அமைதிகாக்க வேண்டுமென உலக வல்லரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
