சிட்னியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போதையில் வாகனமோட்டியதாக கூறப்படும் நபர் மீது 20 பிரிவுகளின்கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவில் பரமட்டா அருகே Oatlands Golf Club பக்கமாக நடைபாதையில் வந்துகொண்டிருந்தவர்கள் மீது 4WD வாகனமொன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட அதேநேரம் மூவர் காயமடைந்தனர்.
தனது ஆறு பிள்ளைகளில் Antony(13), Angelina(12), Sienna(8) ஆகியோரையும் மைத்துனியின் மகளையும் இவ்விபத்தில் பறிகொடுத்த Daniel Abdallah ஊடகங்களிடம் பேசும்போது- தனது உணர்வுகள் மரத்துப்போய் உள்ளதாகவும், பிள்ளைகள் அனைவரும் அமைதியான இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவதானமாக வாகனம் ஓட்டுமாறும் அவர் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த ஏனைய மூன்று பிள்ளைகளும் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 29 வயது நபர் போதையில் வாகனம் ஓட்டியமை கண்டறிப்பட்டுள்ள அதேநேரம் இவர்மீது கொலை, போதையில் வாகனம் ஓட்டியமை, சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் சென்றமை உட்பட 20 பிரிவுகளின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நீதிமன்ற அமர்வில் குறித்த நபர் சமுகமளிக்காததுடன் பிணையில் செல்வதற்கும் விண்ணப்பிக்கவில்லை.
இவ்விபத்து தொடர்பான அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
