குடிவரவுக்கொள்கை விடயத்தில் நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவரவுள்ள சர்வதேச ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் அகதிகள் விவகாரம் என்பது பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்திவருவதால் சம்பந்தப்பட்ட நாடுகள் இது விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கும் - மனித உரிமைகளை பேணும் வகையில் பொறுப்புக்கூறுவதற்கும் ஏதுவாக சர்வதேச குடிவரவு உடன்படிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை முன்மொழிந்துள்ளது.
இந்த உடன்படிக்கை மீதான சர்வதேச மாநாடு எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கையின் இறுதி வரைவு அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்த வரைவில் குறிப்பிட்டபடி, தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்துவைப்பது என்பது இறுதி தெரிவாக கையாளவேண்டிய வழிமுறையாக இருக்கவேண்டும், அதற்கு முதல் வேறு வழிகளின் ஊடாக தீர்வினை அடைவதற்குரிய முயற்சிகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மேற்கொள்ளவேண்டும் என்பது உட்பட பல விடயங்களை ஐ.நா முன்மொழிந்திருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton - ''நாட்டின் இறையாண்மைக்கு சவால்விடுக்கும் சர்வதேச உடன்பாடுகள் எதிலும் ஆஸ்திரேலியா கையெழுத்திடப்போவதில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு உடன்படிக்கையாக கொண்டுவரப்பட்டிருப்பதும் அவ்வாறான ஒன்றே ஆகும். மக்களால் தெரிவு செய்யப்படாத அமைப்புக்கள் அரசுகள் மீது அழுத்தங்களை கொண்டுவரும்வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அதிகம் கரிசனை கொள்ளத்தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
