நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Wollongong பகுதியில் நேற்றுமுன்தினம் 39 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டிருந்தநிலையில் இக்கொலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக 29 வயது ஆண் ஒருவரை பொலிஸார் தேடுகின்றனர்.
Wollongong வடக்கு Bellambi-யில் உள்ள வீட்டிலிருந்து Kristie Powell என்ற பெண்ணின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை அவரது 5 மாத ஆண் குழந்தைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.
குறித்த பெண் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்திருந்த அதேநேரம் குழந்தை எவ்வித காயங்களுமின்றி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பில் 29 வயதான Bhanu Kirkman என்ற நபரை தாம் விசாரணைக்குட்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா அல்லது இந்திய துணைக்கண்டத்திலுள்ள நாடுகளில் ஏதேனுமொன்றைச் சேர்ந்த இவர் Kristie Powell-க்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என நம்பப்படுகிறது.
Illawarra, Shoalhaven மற்றும் சிட்னி பகுதிகளில் நடமாடும் இந்நபரை யாராவது கண்டால் அவரை நெருங்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் உடனடியாக அவர் இருக்கும் இடம் தொடர்பில் 000 என்ற இலக்கத்தை அழைத்து அறியத்தருமாறு கூறியுள்ளனர்.
இதேவேளை கொலை செய்யப்பட்ட Kristie Powell தம்மை யாரோ பின்தொடர்வதாகவும் தொடர்ச்சியாக “இறந்து போ…இறந்து போ” என குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும் இவ்வருட ஆரம்பத்தில் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kristie Powell-யின் மரணம் தொடர்பிலோ அல்லது Bhanu Kirkman என்ற நபர் தொடர்பிலோ தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தை அழைக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
