அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் தொடர்பில் ஐ.நா வின் working group on arbitrary detention- தடுப்புக்காவல்களுக்கெதிரான செயற்பாட்டுக் குழு மீண்டும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலர் 9 ஆண்டுகளைக் கடந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்று என இக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் செயற்பாடு தொடர்பில் கடந்த 2017 ஜுன் முதல் 5 அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் இந்த அமைப்பு காலவரையறையற்ற தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அதிகூடிய காலம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர் கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி வந்த ஆப்கான் பின்னணி கொண்ட ஒருவர் ஆவார்.
இவர் தவிர கடந்த 2010-இல் இங்கு வந்து புகலிடம் கோரிய மேற்கு சஹாராவைச் சேர்ந்த நபர் ஒருவர் உட்பட இன்னும் பலர் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தடுப்புக்காவல்களுக்கெதிரான செயற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் காலவரையற்ற தடுப்புக் காவலில் புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ள இந்தக் குழு இவர்களை உடனடியாக விடுவித்து அவர்களுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
