நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகளை மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவருவதை இலகுவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கான புதிய மருத்துவச் சட்டத்தின்கீழ் நவுறு மற்றும் மனுஸிலுள்ளவர்கள் சிகிச்சைக்காக வரும்போது, பொது மருத்துவமனைகளில் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலியர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு புதிதாக வரும் அகதிகளுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சரின் இக்கூற்றினை வழிமொழிந்துள்ள பிரதமர் Scott Morrison நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவந்தால், நிச்சயம் ஏற்கனவே இங்கு காத்திருக்கும் நோயாளி ஒருவரின் இடத்தை புதிதாக வருபவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பது வெளிப்படை உண்மை என கூறியுள்ளார்.
ஆனால் இக்கூற்றினை வன்மையாக கண்டித்துள்ள எதிர்கட்சியான லேபர்கட்சி, உள்துறை அமைச்சர் மேலும் மேலும் பொய் சொல்வதாகவும் வேண்டுமென்றே மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடல்கடந்து வாழும் ஆயிரம் அகதிகளில் 70 பேரளவிலேயே மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்படும் சாத்தியம் உள்ளதாகவும் இந்த 70 பேரால் ஆஸ்திரேலியர்களின் வாய்ப்பு பறிக்கப்படுமென்பது மக்களைப் பயமுறுத்துவதற்காக வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்கள் எனவும் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten கூறியுள்ளார்.
