இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு இடங்களில் வன்முறைகளாக வெடித்திருப்பதால் இந்தியா செல்கின்ற ஆஸ்திரேலியர்களுக்கு வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
சில இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக வெடித்துள்ளதையடுத்து, பாதுகாப்பு தரப்பினர் ஊரடங்கு சட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த பிரதேங்களில் முன்னறிவித்தலின்றி போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்கள் தடைப்படுகின்றன.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி பலர் இந்த ஆர்ப்பாட்டங்களின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் காயமடைந்துள்ளார்கள். பொதுமக்கள் சொத்துக்களுக்கு ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கையின் புள்ளிகளில் மாற்றங்கள் எதையும் அறிவிக்காதபோதிலும் , இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும்போது, பயங்கரவாத தாக்குதல்கள் மாத்திரமன்றி தனியே பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்றரை லட்சம் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
