அமெரிக்க அதிபர் Donald Trump அந்நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
இதன்படி அமெரிக்காவின் அகதிகள் அனுமதி திட்டம் 4 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள அதேநேரம் சிரியா அகதிகளுக்கான அனுமதி காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
சிரியா அகதிகளுக்கு விசா வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதையும் இடைநிறுத்துமாறு அமெரிக்க குடிவரவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாத செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர 90 நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை என்னென்ன நாடுகள் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவரவில்லை. பெரும்பாலும் Iran, Iraq, Libya, Somalia, Sudan, Syria,Yemen ஆகிய நாடுகள் இதில் உட்படுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் அதிபர் Obama, அமெரிக்காவுக்குள் ஆண்டொன்றுக்கு மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 110,000 ஆக நிர்ணயித்திருந்த நிலையில், இதனை 55,000 ஆகக் குறைப்பதற்கும் Donald Trump தீர்மானித்துள்ளார்.
இஸ்லாமிய கடும்போக்காளர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் செய்யும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருக்கும் அதிபர் Trump, தமது நாட்டின் கடுமையான எல்லைப் பாதுகாப்புச் சட்டங்கள் நிர்ணயிக்கப்படும்வரை இப்புதிய தீர்மானங்கள் அமுலில் இருக்குமென கூறியுள்ளார்.
அதிபர் Trump-இன் இந்த நடவடிக்கை அகதிகளின் வருகையை ஆதரிப்போரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
