ஒருவருடைய அனுமதியின்றி அவர் சம்பந்தப்பட்ட அந்தரங்க புகைப்படத்தை வெளியிடும் நபருக்கு சுமார் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்வகையில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒருவரைப் பழிவாங்கும் நோக்கிலோ அல்லது அவமானத்தை ஏற்படுத்தி துன்புறுத்தும் நோக்கிலோ, குறித்த நபருடைய நிர்வாண அல்லது அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டால் 5 வருடங்கள் முதல் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் டொலர்கள் வரை நஷ்ட ஈடு செலுத்தும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்தகைய புகைப்படங்களைப் பகிரும் நிறுவனங்கள் 5 லட்சம் டொலர்களுக்கு மேல் அபராதம் செலுத்த நேரிடும்.
இதேவேளை தமது நிர்வாண புகைப்படங்களை அடுத்தவருடன் பகிர்வது தொடர்பிலும் தமது துணையுடன் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக்கொள்வது தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் வரை புகைப்படம் சார்ந்த 241 துஷ்பிரயோக முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களது அனுமதியின்றி 385 இணையத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததாகவும் eSafety ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
