கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர் அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானோர் 23 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளதாக உள்துறை அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் இக்காலப்பகுதி 16 மாதங்களாக காணப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக தனித்தனியாக நேர்காணல்களை நடத்தமுடியாதுள்ளமையும், குடியுரிமை பரீட்சைகளை நடத்தமுடியாதுள்ளமையுமே இதற்கான பிரதான காரணங்களாக உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2019-20-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 123,727 பேரின் விண்ணப்பங்கள் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் மே 22ம் திகதி வரை 175,304 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகளை நடத்தமுடியாத சூழல் எழுந்ததையடுத்து பலரும் இணையவழியாக உறுதியேற்று குடியுரிமையை பெற்றுவருகின்றனர்.
இதன்படி சுமார் 16,800 பேர் இதுவரை இணையவழி உறுதியேற்பு நிகழ்வு ஊடாக தமது குடியுரிமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
