SKIP TO MAIN CONTENT

தற்காலிக பாதுகாப்பு விசா: லேபர் கட்சியின் அறிவிப்பும் ஆளுங்கட்சியின் விமர்சனமும்!

அடுத்தமாதம் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி இரு கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் பின்னணியில், அகதிகள் கொள்கை தொடர்பில் இருகட்சிகளும் மோதிக்கொள்கின்றன.

Asylum seekers arriving by boat
Asylum seekers arriving by boat Source: AAP

3 min read

Published

Updated


Skip to article content

அந்தவகையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை லேபர் கட்சித் தலைவர் Anthony Albanese  அவர்கள் தெரிவித்த, தற்காலிக பாதுகாப்பு விசா(TPV) குறித்த கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து புகலிடம்கோரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு விசாவை லேபர் கட்சி எதிர்க்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு 'ஆம் என Anthony Albanese  அவர்கள் பதிலளித்திருந்தார்.

படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கான கடல் கடந்த தடுப்பு முகாம் கொள்கை, அகதிகளை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவது தொடர்பான கொள்கை மற்றும் ஆஸ்திரேலியா நோக்கிவரும் படகுகளை பாதுகாப்பான சூழ்நிலையின்கீழ் திருப்பி அனுப்புதல் ஆகியவற்றை லேபர் கட்சி ஆதரிப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்காலிக பாதுகாப்பு விசாவை தமது கட்சி எதிர்ப்பதாக  Anthony Albanese  அவர்கள் மீண்டும் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப்பின்னணியில் படகு மூலம் வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு விசாவை நீக்கிவிட்டு, இங்குள்ளவர்களுக்கு நிரந்த பாதுகாப்பு விசாவை வழங்கும் லேபர் கட்சியின் திட்டம்,  ஆட்கடத்தல் படகுகள் ஆஸ்திரேலியா நோக்கிவருவதற்கு வழிகோலும் என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் படகுகளைத் தடுக்கும் செயற்றிட்டத்தில், தற்காலிக பாதுகாப்பு விசா ஒரு முக்கிய அம்சம் எனவும், இதனை எதிர்ப்பதானது ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புக் கொள்கையை லேபர் கட்சி புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுவதாகவும், பிரதமர் ஸ்கொட் மொறிசன் விமர்சித்துள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு விசாவை இல்லாதொழிப்பது, ஆட்கடத்தல்காரர்களுக்கான பச்சை விளக்கு எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Kristina Keneally, படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதால், தற்காலிக பாதுகாப்பு விசாவிற்கான தேவை இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஏற்கனவே தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள், உரிய முறையில் வரி செலுத்தி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள் எனவும், இவர்கள் 3 ஆண்டுகளுக்கொருமுறை தமது விசாக்களை புதுப்பித்துக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது,  அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டு,  மக்களின் வரிப்பணமே வீணாகிறது எனவும் Kristina Keneally சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதிகள் என அரசினால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ள பின்னணியில், அவர்களது விசா விண்ணப்பங்களை மீண்டும் மீண்டும் பரிசீலிப்பதினால் உள்துறை அமைச்சில் விசா விண்ணப்பங்கள் தேங்கிக்கிடப்பதாகவும் Kristina Keneally விமர்சித்துள்ளார்.

எதுஎப்படியிருப்பினும் தற்காலிக பாதுகாப்பு விசா இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியானது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமான ஒன்றாக அமையும் என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now