ஆப்கானிஸ்தானை சேர்ந்த முன்னாள் ஊடகவியலாளரும் பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவருமான Mina Mangal அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காபூல் நகரில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது இனம் தெரியாதவர்களால் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் முன்னேற்றத்தை கொண்டுவருவதற்காக தொடர்ந்து பாடுபட்டுவந்த Mina Mangal ஆப்கான் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் கலாச்சார விவகாரங்களுக்கான ஆலோசகராக செயற்பட்டுவந்தார்.
அண்மைக்காலமாக தனக்கு தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்ததை தொடர்ந்து பட்டப்பகலில் Mina Mangal சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலைக்கு எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் பலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஆப்கானில் படுகொலை செய்யப்பட்டுள்ள பதினைந்தாவது ஊடகவியலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
