ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்து ஒன்றுக்கும், உளவியல் பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 2 வயது முதல் 14 வயது வரையான சிறுவர்களுக்கு வழங்கப்படும் Montelukast / Singulair மருந்தினைப் பயன்படுத்திய பலரில் அதீத கோபம், தற்கொலை எண்ணம், மனச்சோர்வு உள்ளிட்ட பல உளவியல் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக Therapeutic Goods Administration (TGA)க்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இச்செய்தி தெரிவிக்கின்றது.
2000ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கிடையிலான காலப்பகுதியில் இவ்வாறான 90க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் Therapeutic Goods Administration (TGA)க்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த மருந்தின் பக்க விளைவுகள் தொடர்பில் புதிய எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்பட வேண்டுமெனவும், Therapeutic Goods Administration (TGA) இது குறித்து மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ள Singulair மருந்து உற்பத்தி நிறுவனம் உலகெங்குமுள்ள பல லட்சக்கணக்கானோர் எவ்வித பிரச்சினையுமின்றி தமது மருந்தினைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவருடன் கலந்துரையாடாமல் Singulair மருந்தினைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம் என Therapeutic Goods Administration (TGA) வேண்டுகோள் விடுத்துள்ளது.
