நவுறுவில் அமைந்துள்ள அகதிகள் தடுப்பு முகாமானது, ஆஸ்திரேலியாவின் மனித உரிமை பதிவுகளில் ஏற்பட்டுள்ள ஒரு “கறை” என ஐ.நா உயர் அதிகாரி Francois Crepeau தெரிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான இவர், கடந்த வருடம் ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாமிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மீள்குடியேற்ற கொள்கைகள் பாராட்டும் வகையில் இருந்தாலும் நவுறு முகாமானது சர்வதேச தரத்தைப் பூர்த்திசெய்யவில்லை என Francois Crepeau குறிப்பிட்டுள்ளார்.
நவுறு முகாம் நிலைமைகளானது, கடல்வழியாக வந்து புகலிடம் கோருவோரை நியாயமற்ற முறையில் தண்டிப்பதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள Francois Crepeau, அங்குள்ள பலர் உளவியல் சிக்கல்களையும் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் உடன்படிக்கை எட்டப்படுவதற்கு முன்னதாக Francois Crepeau-வின் விஜயம் அமைந்திருந்த நிலையில், அவரது அறிக்கையில் பல தவறுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தனது குடிவரவுக் கொள்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.
