ஆஸ்திரேலியாவின் சனத்தொகை இன்று - செவ்வாயிரவு - பதினொரு மணிக்கு இரண்டரைக்கோடியை எட்டவுள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் சனத்தொகை வளர்ச்சி கணிப்பீட்டு மானியின் மூலம் இந்த விவரம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்படுகின்ற பிறப்பு - இறப்பு - குடிவரவு மற்றும் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அனைத்தையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் சராசரியாக 83 செக்கன்களுக்கு ஒரு நபர் என்ற வீதத்தில் நாட்டின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுக்கொண்டிருப்பதாக தங்களது தரவு விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறுகிறது.
ஆஸ்திரேலியாவில் தற்போது ஏற்பட்டுவருகின்ற சனத்தொகை வளர்ச்சியானது எதிர்பார்த்ததைவிட அபரிமிதமானது என்றும், சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களைத்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் நிரந்தர வதிவிடமாக தெரிவு செய்துகொள்கிறார்கள் என்றும் குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Alan Tudge தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் 1998 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணிப்பீட்டின்படி 2051 ஆம் ஆண்டில்தான் ஆஸ்திரேலிய சனத்தொகை இரண்டு கோடியே 35 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எண்ணிக்கையை ஆஸ்திரேலியா 2014 இல்- 33 வருடங்களுக்கு முன்னரே - கடந்திருந்தது.
அதன் பிறகு, குறிப்பிட்ட திணைக்களம் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட எதிர்வுகூறலின்படி 2032 இல் நாட்டின் சனத்தொகை இரண்டரைக்கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதேபோன்றதொரு கணிப்பீடு 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டபோதுகூட இரண்டரைக்கோடி சனத்தொகை என்ற புள்ளியை 2024 இல் ஆஸ்திரேலியா எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சகல ஆரூடங்களையும் மீறி அதிவேகமாக அதிகரித்துச்செல்லும் சனத்தொகையானது 2018 இலேயே ஆஸ்திரேலிய சனத்தொகையை இரண்டரை கோடியாக்கியிருக்கிறது.
