நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடைசெய்யும் வகையில் அந்தந்த மாநில அரசுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
விக்டோரியாவின் அரச பாடசாலைகள் அனைத்திலும் அடுத்த வருடம் முதல் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவரப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள கல்வியமைச்சர் Dan Tehan இந்நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றபட வேண்டுமென ஊக்குவித்துள்ளார்.
பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதை தடுப்பதன் மூலம் கல்வியில் அவர்கள் கூடியளவு கவனம் செலுத்தமுடியும் என்பதுடன் கைத்தொலைபேசிகளின் ஊடாக ஏனைய மாணவர்களின் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களையும் தடுக்க முடியுமென கல்வியமைச்சர் Dan Tehan குறிப்பிட்டுள்ளார்.
விக்டோரியாவில் அடுத்த வருடம் முதல் தவணையிலிருந்து மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது தங்களது கைத்தொலைபேசியை அணைத்து அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் (personal lockers) வைத்துவிட்டு வகுப்புக்களுக்கு வரவேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பாடசாலை தொலைபேசிக்கு அழைத்து பேசமுடியும் என்றும் விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Share
