ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வர முயன்ற ஒரு தொகுதி சீனர்கள் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை வெளிவிவகார அமைச்சர் Julie Bishop உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20ம் திகதி 6 சீனர்களை ஏற்றி வந்த படகும், பப்புவா நியூகினி நாட்டைச் சேர்ந்த ஆட்கடத்தல்காரர் ஒருவரும், Torres Strait-இன் Saibai தீவில் வைத்து இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக Julie Bishop தெரிவித்துள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற வழக்கை அங்கு எதிர்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆஸ்திரேலியா நோக்கி புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளமையை இப்படகுப் பயணம் அர்த்தப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் Julie Bishop, ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாதவகையில் உறுதியாக உள்ளதாகக் கூறினார்.
