19 வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மியான்மாருக்கு புலம்பெயர்ந்து அங்கு உள்ளூர் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ஆங்கிலப்பத்திரிகை - Myanmar Times - ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்த புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளர் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் 13 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டார்.
தென்கிழக்கு ஆசியாவின் பத்திரிகைத்துறையில் 20 வருடங்களாக கோலோச்சிய Ross Dunkley என்பவரே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
Ross Dunkley மியான்மாரில் தனது பிரிட்டிஷ் தொழில் தோழனுடன் தங்கியிருந்த வீட்டில் கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென்று பொலீஸார் சோதனையிட்டதில் அங்கிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து அவருடன் சேர்த்து அந்த வீட்டிலிருந்த பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். இவர்களுக்குரிய தண்டனையை மியான்மார் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியது.
இதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு Ross Dunkley பாலியல் தொழிலாளி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பின்னர் தாக்குதல் நடத்தினார் என மியான்மாரில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
