ஆஸ்திரேலியாவின் தேசிய பல் கலாச்சார திருவிழா (National Multicultural Festival) இன்று வெள்ளிக்கிமை தலைநகர் கன்பராவில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.
கன்பரா நகர மையத்தில் (Canberra City Centre) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த தொடர் திருவிழாவில் சுமார் 350 சமூகங்களின் பங்களிப்புடன்கூடிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியாவில் வாழும் அனைத்து சமூகங்களினதும் நடன நிகழ்வுகள், இசைக்கச்சேரிகள், உணவு விற்பனைகள் என்று அனைத்தும் ஒன்றுசேர அரங்கேறும் பெரு விழாவாக இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருக்கிறது.
இன்று ஆரம்பமாகவுள்ள நிகழ்வில் ஆறாவது அரங்கத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை நான்கரை மணி முதல் ஐந்தரை மணிவரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாளையும் நாளை மறுதினமும் இந்திய பொலிவூட் நடனங்கள் உட்பட பல்வேறு கண்கவர் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
1996 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்ற இந்த கலாச்சார திருவிழாவில் இம்முறை முதல்தடவையாக தாய் மொழியில் கவிதை சொல்லும் அரங்கம் புதிதாதாக இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் கலைஞர்கள் பங்குபற்றுகின்ற இந்த மூன்று நாள் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, கன்பராவில் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
