இந்தோனேஷிய அகதி முகாம்களிலுள்ள பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்திரேலிய அரசு தமக்கு உதவிசெய்யவேண்டும் என்று கோரி ஆறாவது நாளாக இந்தோனேஷியாவின் ஐந்து பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.
இந்தோனேஷிய அகதி முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவருகின்ற ஐ.நா. அகதிகள் ஸ்தாபனம்-UNHCR மற்றும் சர்வதேச புலம்பெயரிகள் அமைப்பு -IOM ஆகியவற்றுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலிய அரசு உதவி செய்துவந்திருந்தது.
இதன்பிரகாரம், மேற்குறிப்பிட்ட அமைப்புக்களில் தங்களது விவரங்களை பதிவு செய்திருந்த அகதிகளுக்கு மாதம் நூறு ஆஸ்திரேலிய டொலர்கள் உதவிப்பணம் வழங்கப்பட்டுவந்தது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அரசின் உதவி நிறுத்தப்பட்ட பின்னர், அதற்குப்பின்னர் தங்களை பதிவு செய்தவர்களுக்கான உதவிகள் கிடைக்கவில்லை. இதனால், சுமார் ஐயாயிரம் அகதிகள் இந்தோனேஷியாவில் எந்த உதவிகளும் இல்லாமல் விடப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி வழங்கவேண்டும் என்றும் தஞ்சம்கோரி வந்த அகதிகளின் மனிதாபிமான கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசு உதவி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தோனேஷிய அகதி முகாம்களில் தற்போது ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மார் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் அகதிகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
