சீனாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியுரிமை பெற்றுக்கொண்ட சீன எழுத்தாளர் ஒருவர் மீண்டும் சீனாவுக்கு சென்றபோது காணமல்போயுள்ளமை குறித்து தமக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
காணமல்போன எழுத்தாளர் Yang Hengjun சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் Marise Payne, அவர் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சில் முன்பு பணிபுரிந்தவரும் நாவலாசிரியருமான Yang Hengjun ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் சீன அரசு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வந்ததுடன் இவரது கருத்துக்களால் சீன அரசு கடுஞ்சீற்றத்துக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Yang Hengjun ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவர். சிட்னி பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டவர். இவரது எழுத்துக்கள் சீன மக்களின் மத்தியில் செல்வாக்கு செலுத்துபவையாக காணப்பட்டன.
இந்நிலையில், அண்மையில் சீனாவுக்கு தனது குடும்பத்தோடு போன Yang Hengjun காணமல்போயிருந்தார். அவரது பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அரசு மட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்பட்டது.
இதையடுத்து, Yang Hengjun சீனாவில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அரசுக்கு சீனாவிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
