ஆஸ்திரேலியாவில் கடந்த 8 நாட்களில் 7 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளநிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வாழ்க்கைத்துணை அல்லது அவர்களுக்குத் தெரிந்த ஆண்களினாலேயே மரணமடைந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அக்டோபர் 3ம் திகதி Nicole Cartwright என்ற 32 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் இவரது உடல் சிட்னி பூங்கா ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
அன்றையதினம் விக்டோரியா Traralgon-இல் 46 வயதான Gayle Potter என்ற 3 பிள்ளைகளின் தாய் தனது முன்னாள் கணவனால் காரால் மோதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் Northern Territory-யில் 29 வயதுப்பெண் ஒருவரும் குடும்பவன்முறையில் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 4ம் திகதி விக்டோரியாவின் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான Dannyll Goodsell மிகமோசமாகத் தாக்கப்பட்டு பின் தீயில் எரியுண்டு கொல்லப்பட்டார். அன்றையதினம் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் Bellambi என்ற இடத்தில் 5 மாத குழந்தயின் தாய் Kristie Powell கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பில் Bhanu Kirkman என்ற இவரது முன்னாள் பணியாளர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ம் திகதி பெர்த்தில் வாழ்ந்த 3 பிள்ளைகளின் தாயும் மனவளமேம்பாட்டு செயற்பாட்டாளருமான Jacqueline Francis கழுத்தில் குத்தப்பட்டதில் மரணமடைந்தார்.
அதேபோல் அக்டோபர் 11ம் திகதி சிட்னி Glenfield-இல் Erana Nahu என்ற பெண்ணும் குடும்பவன்முறையின்போது குத்தப்பட்டு மரணமடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் ஆறில் ஒரு பெண் தமது முன்னாள் அல்லது இந்நாள் வாழ்க்கைத்துணையினால் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
