ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை தருவிப்பது கடந்த பத்து ஆண்டுகளில் ஆறு மடங்குகளால் அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய குற்றப்புலானாய்வு ஆணையகம் தெரிவித்துள்ளது.
2016 - 17 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் நாலாயிரத்து அறுநூறு கிலோ கொக்கேய்ன் போதைத்தூள் ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு முன்னரே கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இதில் பெருந்தொகையானவை தபால் மூலமாகவே தருவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஆக்கிரமிப்பினால் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்துள்ளது என்று ஆஸ்திரேலிய குற்றப்புலானாய்வு ஆணையக பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்களை சட்டவிரோதமாக அனுப்பிவைக்கும் அல்லது எடுத்துவரும் நாடு தொடர்ந்து கொலம்பியாவாகவே உள்ளது என்றும் ஒரு கிராம் போதைத்தூள் சுமார் 600 டொலர்களுக்கு ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பணியிடங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் போதைப்பொருள் பாவனை தொடருவதாகவும் குறிப்பாக இசை நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் போதைப்பாவனையில் திளைத்துவருகின்ற ஆபத்து குறித்து பெற்றோர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
