ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற மரணங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என்றும் இதனால் இறுதிநிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது என்றும் Propel Funeral Partners என்ற இறுதிநிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Propel Funeral Partners நிறுவனம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் தனது சேவையை வழங்கிவருகிறது.
120 இடங்களில் தனது கிளைகளைக்கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்த வருடம் ஜூலை மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றிருக்கும் மரணங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகம் என்றும் இந்த நிலை தொடருமானால் இறுதிநிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்றும் தங்களது நிறுவனம் இந்த காலாண்டுகாலப்பகுதியில் 12.3 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் Propel Funeral Partners தெரிவித்துள்ளது.
இந்தவருடம் மாத்திரம் இடம்பெற்றுள்ள இறுதி நிகழ்வுகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 304 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
