மிலேனியம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களில், அதிக எண்ணிக்கையில் நிரந்தரமாக குடியேறியவர்கள் இந்தியர்களே என்று ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டுக்குரிய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 01, 2000-ஆம் ஆண்டுக்கும் ஆகஸ்ட் 09, 2016 -ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த பன்னாட்டு குடிவரவாளர்களில் இந்தியர்களே அதிகம் பேர் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுள்ளார்கள் என்றும், இவர்களில் அதிகம்பேர் சொந்த வீட்டை வாங்கியுள்ளார்கள் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் பிறந்த சுமார் 2 லட்சத்தி 92 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறார்கள் என்றும் இவர்களில் 2 லட்சத்தி 34 ஆயிரம் பேர் skilled migration விசா மூலம் குடியேறியவர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு அடுத்ததாகவே இங்கிலாந்து, சீனா,பிலிப்பீன்ஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொண்ட இந்தியர்களில் 95 வீதமானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றும் இந்தக்காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொண்ட சீனர்களில் 32 வீதமானவர்களே ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 - 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொண்ட 19 லட்சத்து 10 ஆயிரத்து 711 பேரில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 402 பேர் உடன்பணத்துக்கு வீடு வாங்கியிருக்கிறார்கள் என்றும், எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 795 பேர் வங்கிக்கடன் மூலம் சொந்த வீடு வாங்கியுள்ளார்கள் என்றும் அந்த கணக்கெடுப்பிலிருந்து மேலும் அறியவந்துள்ளது.
