புலம்பெயர்ந்த சீன சிறுபான்மை சமூகமான Uighurs மக்களுக்கு சீன பாதுகாப்பு தரப்பினரால் ஆஸ்திரேலியாவிலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக Uighurs சமூக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
தொலைபேசி ஊடாகவும் வட்ஸ் அப் தகவல்கள் ஊடாகவும் தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தகவல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அவ்வாறு அனுப்புகிறவர்கள் தங்களை சீன பாதுகாப்பு படையினராக அடையாளம் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Uighurs மக்கள் Turkic என்ற தனியான அடையாளமுடைய - இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்ற - சமூகத்தவர்கள். இவர்கள் சீனாவின் மேற்கு பகுதியில் பரந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கென்று தன்னாட்சி உடைய நிலப்பரப்பு உள்ளது.
ஆனால், அவர்களை தமது அடக்கு முறையின் கீழ் வைத்திருக்கும் சீன அரசு அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தடுப்புமுகாம்களில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Uighurs மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்படும் பல்வேறு அடக்குமுறைகள் - சித்திரவதைகள் குறித்து பல வெளிநாடுகளும் ஐ.நாவும்கூட தொடர்ந்து சீனாவை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறது.
இப்படியானதொரு நிலையில், சீனாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் Uighurs மக்களையும் சீனப்படையினர் வேவு பார்த்து வருவதாகவும் அவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவருவதாகவும் Uighurs சமூகத்தை சேர்ந்த மக்கள் தமது சமூக தலைவர்களின் ஊடாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.தமது சமூகத்துக்கு சீனாவில் இழைக்கப்பட்டுவரும் கொடுமைகள் குறித்து ஆஸ்திரேலியாவில் பேசக்கூடாது என்று மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
