பிரித்தானியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கடந்த ஆறு வருடங்களாக மருத்துவராக பணியாற்றிய பெண்மணியும் கணவரும் இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த நேரம் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களோடு சேர்ந்து சென்ற மகன் இன்னொரு ஹோட்டலில் தங்கியிருந்ததால் உயிர்தப்பிவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மருத்துவரான Sally Bradley மற்றும் Bill Harrop ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரஜைகளான இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பேர்த்தில் வசித்துவந்திருக்கிறார்கள்.
பிரித்தானியாவில் முப்பது ஆண்டுகளாக தீயணைப்பு படை வீரராக பணிபுரிந்த Bill Harrop, 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்தார். அடுத்த வருடமே தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். மருத்துவர் Sally Bradley பேர்த்தில் தொடர்ந்தும் பணியாற்றியிருந்தார்.
பன்னெடுங்காலமாக பிரித்தானிய தீயணைப்பு படையில் பணிபுரிந்த மிகுந்த மதிப்புக்குரியவராக திகழ்ந்த Bill Harrop, 1996 இல் பிரித்தானிய மன்செஸ்டரில் இடம்பெற்ற IRA குண்டுவெடிப்பு சம்பவத்தில் திறமையாக செயற்பட்ட தீயணைப்பு படைவீரர் என்ற கௌரவத்தை பெற்றிருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியர் விரைவில் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவிருந்த நிலையிலேயே இந்த கோரச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
